'தாவோ தே ஜிங்' (TAO TE CHING) என்பது சீன செவ்வியல் மெய்யியல் (தத்துவ) நூலாகும். இந்நூல் 'லாவோ சீ' (லாவோட்சு) என்ற தத்துவ ஞானியால் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. 'டாவோயிசம்' அல்லது 'தாவோயிசம்' என்ற மெய்யியல் கோட்பாட்டிற்கு அடித்தளமான நூல் இது. உலக இலக்கிய தத்துவ நூல்களுள் அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட நூலாக இது விளங்குகிறது.
தாவோ - வழி
தே - நேர்மைக்கு உந்துதல்
ஜிங் - நூல்
நடைமுறை வாழ்க்கைக்கு வழி காட்டக்கூடிய அருமையான நூல் இது. இந்நூல் கருத்துக்களை மேலோட்டமாகக் காணும்பொழுது பொருள் அற்றதாகவும் மிக இயல்பானதாகவும் தோன்றினாலும் ஆழ்ந்து உணர்ந்து நோக்கும்பொழுது இதில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு கருத்தும் நம்மை மெய்ஞான வழிக்கு அழைத்துச் செல்வதாய் அமைந்துள்ளது.
தாவோயிச நெறிமுறைகளாக 'கருணை, அடக்கம், பணிவு' என்பனவும் தாவோயிச சிந்தனைகளாக 'நலம், நீண்ட வாழ்நாள், இயல்புச் செயல்பாடு' ஆகியவையும் கூறப்பட்டுள்ளன. 'செயல்படாமையின் வேதநூல்' என்று இது வர்ணிக்கப் பட்டாலும் உற்றுநோக்கும் போது இன்றைய நாகரிக நடைமுறை வாழ்வுக்குப் பொருத்தமான கோட்பாடாக இது விளங்குகிறது.
தாவோயிச கோட்பாடுகள் பல்வேறு காலகட்டங்களில் சொல்லப்பட்ட இந்து மத இறை தத்துவங்களுடன் எவ்வாறு பொருந்துகிறது என்று பார்ப்போம்.
தாவோயிசம் கூறும் 'செயல்படாமை' என்பது இயற்கையின் போக்கில் நம்மை செலுத்துவது என்றும், இயற்கைக்கு மாறாகச் செயல்படாமை என்றும் பொருள் கொள்ளப்பட வேண்டும்.
எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும்போது நம்முடைய சிந்தனைத்திறன் குறைந்து மனம் அமைதியடைய மறுக்கிறது. உடல் சோர்வடைகிறது. செயல்படாது அமைதியாக இருக்கும் பொழுது உடலும் மனமும் ஓய்வுபெற்று அதீத வேகத்துடன் இயற்கையாகச் செயலாற்றத் தொடங்குகிறது. இதன் மூலம் சிறிய அளவு முயற்சியில் மிகப்பெரிய வெற்றியை அடைய முடிகிறது. நாம் செய்யும் அன்றாடப் பணிகளிலிருந்து சாதனை படைக்கும் மிகப்பெரிய செயல்கள் வரை இக்கோட்பாடு மிகப்பொருத்தமானதாக விளங்குகிறது.
இதே கருத்து வள்ளலார் பெருமான் அருளிய 'திருவருட்பா' பாடலிலும் பிரதிபலிக்கிறது. அப்பாடலாவது...
'இன்று வருமோ நாளைக்கே வருமோ
அல்லது மற்றென்று வருமோ அறியேன்
எங்கோவே... துன்றுமல வெம்மாயை அற்று
வெளிக்குள் வெளி கடந்து
சும்மா இருக்கும் சுகம்...'
இங்கு, 'சும்மா இருக்கும் சுகம்' என்பது 'ஆன்மாவானது வெளிகள் பல கடந்து உடலுடன் சேரும் நிலை'யைக் குறிக்கிறது. உடலும், மனமும் சும்மா இருக்கும்போது மட்டுமே ஆன்மா உடலுடன் கலந்து இறையடியை அடைய முடியும். அலைபாயும் மனம், ஞான தவம் செய்ய இயலாது.
'உன்னைப் பற்றி அறிவது உண்மையான ஞானம்' என்ற தாவோயிச கோட்பாடு இங்கு பொருந்துகிறது.
'என்னை அறிந்திலேன் - இத்தனைக் காலமும்
என்னை அறிந்தபின் ஏதும் அறிந்திலேன்...'
என்ற திருமந்திரப் பாடலில் திருமூலரின் கூற்றும் இதை மெய்ப்பிக்கிறது.
'உன்னையே நீ அடக்கி ஆள்வது உண்மையான வல்லமை' என்ற 'லாவோட்சு'வின் கோட்பாடு, 'உன்னை நீ அறிவதே இவ்வுலகிற்குச் செய்யும் தொண்டு' என்ற மகான் ரமண மகரிஷி அவர்களின் அற உரையோடும் பொருந்துகிறது.
உடல் என்பது அழியக்கூடியதாயினும் அது ஆன்மா குடியிருக்கும் வீடாகிறது. எனவே உடலைப் பேண வேண்டியதின் அவசியத்தை 'உடம்பை வளர்த்தேன், உயிர்வளர்த்தேனே...' என்று கூறுகிறார் திருமூலர். இக்கருத்து 'நலம் மிகப்பெரிய சொத்து' என்ற தாவோயிச சிந்தனையுடன் ஒப்புமை உடையதாகிறது.
'தண்ணீர் மிக மென்மையானது. அது எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் தாழ்வான இடங்களிலும் பாய்கிறது. கடினமான பாறைகள் நாளடைவில் நலிந்து சிதைந்து சிதறிப் போகின்றன...' என்ற லாவோட்சுவின் கருத்து கருணையையும், மென்மையையும் போதிக்கின்றன.
'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடி, பசித்திருக்கும் உயிருக்குப் பசியாற்றும்' ஜீவகாருண்ய ஒழுக்கம் கண்ட வள்ளலார் கூறிய நெறியும் இதுவே.
'மென்மைதான் நெடுங்காலம் வாழ்வதற்குரிய வலிமையையும், பலனையும் தரவல்லது. அன்றி, வெறும் காட்டுமிராண்டித்தனமோ, உடம்பின் வலிமையோ அல்ல...' என்ற சுவாமி விவேகானந்தருடைய கூற்றும் இதை மெய்ப்பிக்கிறது.
'எளிமை, கருணை, இன்சொல்' மூன்றும் உலகத்திற்கான புதையல் என்ற லாவோட்சுவின் கருத்துகளும்,
'யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை...
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை...
யாவர்க்குமாம் உண்ணும்போதொரு கைப்பிடி...
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே...' என்ற திருமூலரின் திருமந்திரப் பாடலும் ஒத்த உணர்வுடையதாய்த் திகழ்கின்றன.
'மௌனம் பழகு' என்ற வள்ளலாரின் அறிவுரையும் 'மவுனம் வலிமையின் சிறந்த உற்பத்தி இடம்' என்ற லாவோட்சுவின் தத்துவமும் ஆற்றலைச் சேமிப்பதுடன் துன்பங்களைத் தவிர்த்தலுக்குமான உந்துதலைத் தருகிறது.
'அண்டம் என்பது இயல்பான ஒரு வழி. மனிதன் அதன் வழியை ஒத்துப்போகும்போது முழுமை அடைகிறான். உற்று நோக்கினாலும் எதைப் பார்க்க முடியவில்லையோ அது வெறுமை. செவிமடுத்தாலும் எதைக் கேட்க முடியவில்லையோ அது அரிது...' என்ற தாவோயிச சிந்தனை மிகப் பெரிய ஆன்மீகப் பாதையை நமக்குக் காட்டுகிறது.
இறைவன் அண்டமாய் விளங்குபவன். காணற்கு இயலாதவன். கேட்பதற்கு அரிதானவன். அனைத்தையும் கடந்தவன். அருவமாய் நிற்பவன் - அவனை மனதால் மட்டுமே உணர முடியும். இதையே லாவோட்சு கூறும் கவிதை விளக்கம் நம்மை உணர வைக்கிறது.
ஆரக்கால் முப்பதும் சக்கரத்தின் மையத்தில் இணைந்தாலும் சக்கரத்தின் பயன் அதன் வெற்றிடப் பகுதியால் கிடைக்கிறது. பாண்டம் பாண்டமாக களிமண் வனையப்படினும் பாண்டத்தின் பயன் அதன் வெற்றிடத்தில் கிடைக்கிறது. வாயிலுக்காகவும், சன்னலுக்காகவும் விடப்படும் வெற்று வெளியே பயன்படுத்தப்படுகிறது.
இருத்தலின் பயன் ஒருபுறம் இருக்க இருத்தலின்மையின் பயன் மற்றொன்றாகிறது. இருப்பதுவும் இல்லாதிருப்பதுவுமான இரண்டு நிலைகளுக்கு இடையேயான வாழ்க்கையில் ஒரு பிடியிலிருந்து பிறிதொன்றை எட்டிப்பிடிக்கும் முன்னே ஏற்படும் வெற்றிட அனுபவங்களே வாழ்வின் உருவத்தை நமக்கு வரைந்து காட்டுகின்றன. 'உண்டு' என்ற சிந்தனையே பயனுள்ளது என்ற கருத்தை மறுக்கும் தாவோயிசம் எந்த ஒன்று உருவாக வேண்டுமெனினும் 'உண்டு' மட்டும் போதாது; ' இல்லை' யும் வேண்டும் என்கிறது.
நம் பார்வையில் படும் உருப்பொருட்கள் உண்மை எனினும் உருவமல்லாத வெற்றிடமே நமக்குப் பயனுடையதாகிறது. எனவே 'இன்மை'யைப் புறக்கணிக்கக் கூடாது என்கிறார் லாவோட்சு. இக்கருத்து இந்துமத இறைக் கொள்கையில் பெரிதும் பிரதிபலிக்கிறது.
'அண்டமாய் அவனி யாகி அறியொணாப் பொருளதாகி...' - ஷண்முகக் கவசம் (பாம்பன் சுவாமிகள்)
'ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் ஜோதியை யாம் பாட...' - திருவெம்பாவை (மாணிக்கவாசகர்)
'அணுவாகி அண்டமாகி அகிலமாளும் அருவுருவாய்...' - அம்பிகை அந்தாதி (அம்பர் காவலன் சேந்தன்)
'வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யான் எனதென்றவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே...' - திருவாசகம் (மாணிக்க வாசகர்)
இக்கருத்துக்கள் அனைத்துமே இறை தத்துவத்தையும் பிரபஞ்ச உண்மையையும் நமக்குத் தெளிவாக்குகிறது.
'மகிழ்ச்சியாக வாழ்தல்' என்பதே தாவோயிசத்தின் அடிப்படைக் கோட்பாடு. இக்கருத்து,
'எல்லோரும் இன்புற்றிருக்க
நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்று
அறியேன் பராபரமே...' - பராபரக்கண்ணி (தாயுமானவர்) என்ற பாடலோடும், 'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்...' என்ற திருமூலரின் கருத்தோடும் ஒப்புடையதாய் விளங்குகிறது.
தாவோயிச கோட்பாடுகள் அனைத்துமே கட்டளைகளாக பிறப்பிக்கப்படாமல் இயல்பான கருத்துக்களாக போதிக்கப்படுவது இதன் எளிமைத் தன்மையைப் பிரதிபலிக்கிறது.
சீனத்தைச் சேர்ந்த 'லாவோட்சு' என்ற ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த மிகப் பெரிய ஞானியின் கைப்பிடித்து நாம் இன்றைய நடைமுறை வாழ்வில் பயணிப்பது போன்ற உணர்வைத் தருகிறது *'தாவோ தே ஜிங்'* என்பது மிகையல்ல.
அருமையான படைப்பு
ReplyDeleteநன்றி
Deleteஅற்புதம்.
ReplyDeleteஅம்பிகை அந்தாதியைப் பற்றிய விபரங்கள் கிடைக்குமா?