Skip to main content

கிருமி போதனை..!

"வயதாகிவிட்டது... அடிக்கடி வந்து செல்..." என்ற அம்மாவிடம் அலுவலக வேலையைக் காரணம் காட்டி, சந்திக்கக் காலம் நீட்டித்ததும்...

"ஊருக்கு போகணும்மா... இரண்டு நாள் விடுமுறை தாங்க..." என்ற பணியாளிடம் "முடியவே முடியாது..." என மறுத்ததும்...

"அப்பா... நேற்று பள்ளியில்..." என்று ஆரம்பிக்கும் முன்பே "நிறைய வேலை இருக்கு, கிளம்பு..." என்று மகளின் வாயை அடைத்ததும்...

"இரவு உணவுக்குக் காய்கறி புலாவ் செய்து தருவீர்களா..?" எனக் கேட்ட மகனை அலுவலக தொடர் வேலையைக் காரணம் காட்டி செய்ய மறுத்து முகம் சுருங்க வைத்ததும்...

அக்கம் பக்கத்தாரிடம் பேச பல விஷயங்கள் இருந்தும், நேர மேலாண்மை கருதி முகமன் தவிர்த்ததும்...

"காப்பு கட்டியாச்சு... யாரும் வெளியே போகக் கூடாது, உள்ளேயும் வரக்கூடாது..." என்று கிராமத்து பூசாரி கூறியதை எள்ளி நகைத்ததும்...

சுத்தம் கருதி "கால்களைக் கழுவி உள்ளே வா..." என்ற பாட்டியைப் பத்தாம் பசலியாய் பரிகசித்ததும்...

ஓரிரு நாட்களில் மாறிப்போனது. மாற்றியது அணுவினும் சிறிய ஓர் கிருமி..!


அம்மாவை வீட்டிற்கு அழைத்து வந்தாகி விட்டது.

சுயநல மனிதாபிமானத்துடன் பணிப்பெண்ணுக்குக் கட்டாய விடுமுறை கொடுத்தாகி விட்டது.

மகளுடன் சதுரங்கம் விளையாடி ஆகிவிட்டது.

மகனுக்குச் சுவையான காய்கறி புலாவ் செய்து பரிமாறியாகிவிட்டது.

சுற்றத்துடன் நலம் விசாரித்தாகி விட்டது.

விடுமுறை என்றாலே வெளியே சுற்றிய கால்களுக்கு சுய காப்பு கட்டியாகி விட்டது.

காலையும் கையையும் தேய்த்து கழுவியதில் பாட்டி சொல்லே மந்திரமாகி விட்டது.

ஆனால்...

இந்த மாற்றங்கள் நிகழ ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒரு உந்து சக்தி தேவைப்படுகிறது - உடன் சில உயிர்ப்பலிகளும்.

நிலநடுக்கம், ஆழிப்பேரலை, வெள்ளப் பெருக்கு, விதவிதமான பெயர்கள் கொண்டு விரைந்து வரும் புயல்கள் போன்றவற்றால் ஏற்படும் சில உயிர்ப்பலிகளே, நமக்கு 'ஞான குருவாய்' நின்று மாற்றத்திற்கான உந்து சக்தியாய் உருவெடுக்கின்றன.

இன்றோ... கண்ணுக்குத் தெரியா ஒரு கிருமி நமக்கு இன்னொரு பாடம் கற்பித்துக் கொண்டு இருக்கிறது. நாம் செய்த நல்லனவும் அல்லனவும் கண்முன் விரிகின்றன.

இயற்கையின் சவால்கள் தீரும் வரை மட்டுமே நீளும் இம்மாற்றம் பின் மறைந்து மனம் என்னும் வேதாளம் முருங்கை மரம் ஏறி விடுகிறது. 

நல்லதோர் வீணையைத் தந்த பூமித்தாயை நலங்கெட புழுதியில் எறிந்து விடுகிறோம். இயற்கை மீதும் பிற உயிர்கள் மீதும் அக்கறை காட்டுவதை மறுக்கிறோம் - மறக்கிறோம்.

இன்று... இப்பொழுது இந்த நொடியை சுவைத்து வாழவேண்டிய நாம் நாளை நோக்கியே பயணப் படுகிறோம்.

நாளை என்ற தேடலில் இன்றைத் தொலைக்கிறோம்.

'மாறுவதெல்லாம் உயிரோடு - மாறாதது மண்ணோடு' என்பதை ஒரு நோய்க்கிருமி நமக்கு இன்று கற்பித்து விட்டது.

இனியும் உயிர்ப் பலி இல்லா மாற்றத்துக்கு மாறுவோம்.

இந்த ஓய்வில் அதிகம் சிந்திப்போம். 

மாறுவோம் - மாற்றத்தை ஏற்படுத்துவோம்..!

- உமா

Comments

Popular posts from this blog

தாய்மையைப் போற்றுதும்...! தாய்மையைப் போற்றுதும்...!

உதடுகளாலும் நினைவுகளாலும் என்றுமே என்னை ஆசிர்வதிக்கும் அம்மாவுக்கு இறைவன், தான் எல்லோரிடமும் அன்பு செய்யும் பொருட்டு தாயைப் படைத்தான்...!  படைக்கும் பிரமனுக்குச் சமமாகத் தாய் என்பவள் போற்றப்படக் காரணம், பெருவரமான  `தாய்மை`. தாயை மதித்துப் போற்றும் பண்பாலேயே பிறந்த நாட்டைத்  தாய்நாடு எனவும்,உதடுகள் இணைந்து ஒலிக்கும் முதல் மொழியைத் தாய்மொழி எனவும் கூறி பெருமிதம் கொள்கிறோம். சங்ககாலம் முதற் தொட்டு இக்காலம் வரை தாய்மையைப் பாடாத கவி  ஞ ர்களைத் தேடிக் கண்டெடுக்க வேண்டும்...! தாய்மையைப்  பேசவும் எழுதவும் எல்லை என்பதேது? எச்சூழ்நிலையிலும் வெறுக்காது நம்மை ஏற்றுக் கொள்ளும் தன்னலமில்லா அன்புகொண்டவள் அன்னை. ஐ ந்தறிவு கொண்ட உயிரினங்களும் பகுத்தறிவு பெறும்_  ``தாய்மை` என்ற பேறு கொள்ளும்போது...! தாயை இறைவனாகக்  காண்பது பொதுநிலை .அந்த இறைவனையே தாயாய் நினைத்து உள்ளம் உருகுதல் பெருநிலை .கருணையின் வடிவமான இறைவனையே,தாய்மை நிலைக்கு  அழைத்துச்  சென்று அவனையே தாய்மையை உணரச்  செய்வது, அனைத்துக்கும் அப்பாற்பட்ட வேறுநிலை . ...

வாய்க்காலும் பனைமரமும் உணர்த்தும் நட்பு...!

இரு உயிர்களுக்கு இடையே காணப்படும் ஒன்றுபட்ட, ஒத்த உணர்வும் எண்ணங்களும் ' நட்பு ' என்னும் சொல்லுக்குப் பாலமாய் அமைகின்றன. சங்ககால இலக்கிய மாந்தர்களான கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார் அதியமான் - ஒளவையார் பாரி - கபிலர் ஆகியோர் அரசர்களுக்கும் புலவர்களுக்கும் இடையேயான மாசற்ற, இழிவற்ற, சுயநலமற்ற  நட்பினைப்  பறை சாற்றுவோராவர். ' ஒருவர்  பொறை இருவர் நட்பு ' எனக் கூறும் நாலடியார் நட்பின் அடிப்படைத் தன்மையாகப் ' பொறுத்தல் ' என்ற பண்பைக் குறிக்கிறது. நட்பு, நட்பாராய்தல், கூடாநட்பு, தீ நட்பு முதலியன பற்றி அறநூல்கள் பலவும் பலவிதமாக விளக்கினாலும், 'நாலடியார் 'கூறும் இவ்விரு பாடல்களும், இன்றைய வாழ்வியலோடு மிகவும் பொருத்தமானதாகவும், உளவியல் தன்மை கொண்டதாகவும் விளங்குகிறது. நாய்க்கால் சிறுவிரல் போல் நன் கணியாராயினும் ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்? சேய்த்தானும் சென்று கொளல் வேண்டும், செய்வினைக்கும் வாய்க்கால் அனையார் தொடர்பு.  (நாலடியார் 218) நாயின் காலில் இருக்கும் சிறிய விரல்களைப் போல, மிகுந்த நெருக்கம் உடையவராய்ப் பழகும் பலர், ஈயின் காலளவு கூட உதவி செய்யா ...

கல்விக்கு வழிகாட்டும் வள்ளுவம்...!

வெள்ளத்தால் போகாது வெந்தணலால் வேகாது வேந்தராலும் கொள்ளத்தான் முடியாது  கொடுத்தாலும் நிறைவொழியக் குறைபடாது கள்ளர்கோ மிக அரிது காவலோ மிக எளிது கல்வி என்னும் உள்ளத்தே பொருளிருக்க உலகெலாம் பொருள் தேடி உழல்வதேனோ...!  - விவேக சிந்தாமணி திருக்குறள் என்பது அறநூல்களின் அறிவுச்சுரங்கம். அந்த அறிவுச்சுரங்கத்தில் காணக்கிடக்கும் அதிகாரங்கள் பற்பல. கல்வி,கல்லாமை,கேள்வி,அறிவுடைமை போன்ற அதிகாரங்கள் அனைத்துமே கல்வியின் தொடர்புடையதாய் இருப்பினும் 'கல்வி' என்ற அதிகாரத்தில் கூறப்பட்ட வள்ளுவத்தின் வழிகாட்டலைக் கூறுவதே இக்கட்டுரையின் நோக்கம். இரண்டடி குறள் வெண்பாவால் ஆன திருக்குறளில், அந்தந்த காலத்திற்கேற்ற செய்திகள் வழிகாட்டுதல்கள் ஆகியவை நிரம்பி வழிகின்றன. 'கண்டதைப் படிக்கப் பண்டிதன் ஆவான்' என்ற சொல்வழக்கு ஒன்று உண்டு. 'கண்டு அதைப் படிக்கப் படிக்கப் பண்டிதன் ஆவான்' என்பதே சரி. கண்ட நூல்களை எல்லாம் கற்பதால் பயனில்லை. பாகுபாடு அறிந்து கற்கத் தகுந்த நூல்களைக் கற்பதால் மட்டுமே அறிவு வளர்ச்சி பெறும். இல்லையானால் காலமும் முயற்சியும் வீணாகும். அப்படித் தேர்ந்தெடுத்துப் படிக்கும் நூல்களை...