Skip to main content

ஆசிரியர் தின சிறப்புக்கட்டுரை - ஆசிரியர்களும் மெய்ந்நிகர் (VIRTUAL) வகுப்பறைகளும்…!

Teacher and students

நல்லாசிரியர் என்பவர் கடினமான கருத்துகளை எளிதாகக் கற்பிக்கக் கூடியவராகவும், புதியதைப் புரிந்து கற்றுக் கொள்ளும் திறம் உடையவராகவும் இருக்க வேண்டும். – கன்பூசியஸ்

சென்ற ஆண்டு வரை...

ஆசிரியர் தினமென்றால்…! 

பள்ளிக்குள் நுழையும் பொழுதே…

‘ஆசிரியர் தின வாழ்த்துகள்’

என்ற வாழ்த்தொலியோடு கூடிய பூங்கொத்தாய்ச் சிரிக்கும் முகங்கள்…!

வகுப்பறைக்குள் கால் வைத்த மறுகணமே மலர்மாரி…!

வண்ணக் காகிதத் தோரணங்களால் வகுப்பறை அலங்காரம்…!

கரும்பலகை முழுதும் பாராட்டு வாசகங்கள்…!

கையிலுள்ள பூக்கள் உதிர்வதற்குள் ஆசிரியரிடம் சேர்த்துவிட வேண்டுமென்ற பரபரப்பு…!

குவியும் வாழ்த்து அட்டைகள்…!

அட்டைகளைத் தானே தயாரித்து வண்ணமிட்டு, மனதிலுள்ள வாசகங்களை

எழுதி உறையிட்டு முட்டி மோதி ஆசிரியரிடம் சேர்த்து, உடனே கருத்து

கூறக் கட்டாயப்படுத்தும் உரிமையான அன்பு…!

வாழ்த்து மடல்களைப் பிரித்தால், 

என் தேவதைக்கு…,

உலகின் மிகச்சிறந்த ஆசிரியருக்கு…,

என்ற ‘விளித்தலுடன்’ தொடங்கும்

சொற்றொடர்கள்…!

‘பிறவிப் பயனை’ அன்றே எய்திய உணர்வு ஏற்பட்டுவிடும் என் போன்ற ஆசிரியர்களுக்கு…!

‘நரை கூடிக் கிழப்பருவம்’ தொடும் வயதிலும் ஆசிரியர்களைத் தேவதைகளாய், கண்களால் அன்றி மனதால் இரசிக்கத் தெரிந்த பிஞ்சு உள்ளங்கள்…!

இந்த ஆண்டு…

இக்குதூகலங்கள் ஏதுமில்லா மெய்யில்லா மெய்ந்நிகர் ஆசிரியர் தினம்… (Virtual teacher’s day) கொண்டாடப்படுகிறது. இக்கொண்டாட்டம் வேறு விதமான அனுபவத்துடன் அமைகிறது.

கற்றலும் கற்பித்தலும் எவ்வகையிலும் தடைபடாது இருக்க, ‘பள்ளி வகுப்பறைகள்’ எல்லாம் ‘மெய்ந்நிகர் வகுப்பறைகள்’(Virtual class room) எனப் புது அவதாரம் எடுத்துள்ளன.

நாடு முழுதும் முழு ஊரடங்கைப் பின்பற்றிய நிலையில், சொந்தப் பயன்பாட்டிற்கு வைத்திருக்கும் செல்லிடப்பேசியையும், மடிக்கணினியையும் குழந்தைகளுக்கான மின்னூலாக்கிய (e-book) பெற்றோர்…!

(ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ள வீட்டில் மின்னணுக் கருவிப் பங்கீடு என்பது மிகப் பெரிய சவால்)

புத்தகங்களும் குறிப்பேடுகளும் போதிய அலைவரிசை வசதிகளும் இல்லாத நிலையிலும் இருக்கக்கூடிய வசதிகளையும், கருவிகளையும் வைத்து ‘கற்றல்’ ஒன்றையே நோக்கமாகக் கொண்டு ‘நிகழ்நிலை வகுப்புகள்’ (ONLINE CLASS) மூலம் அறிவைப் பெறும் குழந்தைகள்…!

கற்பித்தலுக்குத் தேவையான புத்தகங்கள், குறிப்பு நூல்கள் ஆகியவை இல்லாத நிலையிலும் வலைத்தளம் மூலம் அனைத்தையும் பதிவிறக்கம் (DOWNLOAD) செய்து, எவ்வாறெல்லாம் கற்பித்தால் கருத்துகள் மாணவரைச் சென்றடையும் என ஆய்வு செய்து, தொடர்புடைய மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் தகவல் அனுப்பி, நிகழ்நிலை வகுப்புகளில் அவ்வப்போது ஏற்படும் தொழில் நுட்பக் குறைபாடுகளைச் சரிசெய்து, கருத்துகளைப் புரிய வைத்து, குறிப்பேடுகளில் எழுத வேண்டிய கருத்துகளைப் பதிவேற்றம் (UPLOAD) செய்து, தொடர்புடைய காணொலிகளை அளித்து, வீட்டில் இருக்கும் பலகைகளையே ‘கரும்பலகைகள்’ ஆக்கி, ‘மெய்ந்நிகர்’ வகுப்பறையை ‘மெய்’ வகுப்பறையாய் மாற்றும் ஆசிரியர்கள்…!

பெற்றோர், ஆசிரியர்களுக்கிடையேயான தகவல் தொடர்பிற்கு வழிவகுத்து தொழில்நுட்பப் பயிற்சிகளை ஆசிரியர்களுக்கு அளித்து தகுந்த வழிகாட்டுதல்களைஅவ்வப்போது வழங்கி அனைவருக்குமான பாலமாய் விளங்கும் பள்ளி நிர்வாகம்…! 

இவ்வாறான அனைவருடைய கூட்டு முயற்சியே தடைபடா கற்றலுக்கான வெற்றிக் காரணியாகிறது.

ஆசிரியர்கள், பெற்றோர், குழந்தைகள், பள்ளி நிர்வாகம் என எல்லோருக்குமான புதிய சவால்களை ஏற்படுத்தி, அதில் பெருமளவு வெற்றியும் பெற்று விட்டன மெய்ந்நிகர் வகுப்பறைகள்.(Virtual Class Room)

கல்வியியல் பணியின் வெற்றிக்கு மிக முக்கியமானது குழந்தைகள் மீதான சரியான அணுகுமுறை. குழந்தைகள் மீது ஆர்வம் இல்லாதவர்கள் ஆசிரியப் பணியில் வெற்றி அடைவது கடினம். குழந்தைகள் மீதான அன்பிலிருந்து கல்விப் பணிக்கான அன்பு பிறக்கிறது. 

இப்படிப்பட்ட முழு மனதான அன்பும், மாணவர் மீது காட்டும் உன்னதமான கண்காணிப்புமே, அம்மாணவனைப் பின்னாளில் சிறந்து விளங்கச் செய்கிறது.

நாட்டின் மிகச்சிறந்த அறிவு வகுப்பறையின் கடைசி இருக்கையிலும் இருக்கலாம் என்பதை உணர்ந்து மாணவர்களை ஊக்குவிப்பவர்கள் ஆசிரியர்கள்.

ஒவ்வொரு குழந்தையையும் உலகளாவிய மனித வளர்ச்சிக்கு அறிமுகப்படுத்துபவர்கள் ஆசிரியர்கள். ஏனெனில் மாணவர்கள், தான் நேசிக்கும் ஆசிரியரிடமிருந்தே பாட அறிவையும் அனுபவங்களையும் பெறுகிறார்கள்.

இன்றைய மாணவர்களுக்கு அறிவை வழங்க ஊடகங்களும், பலவிதமான செயலிகளும், வலைத்தளமும் தயாராக இருப்பினும் கற்றலில் அறிவைப் பெறுவது மட்டுமே போதுமானதன்று.

கருத்துப் பரிமாற்றம், கலந்துரையாடல், செயல்பாடுகள், ஆரோக்கியமான விவாதங்கள் ஆகியவை மாணவர்களை மிகச்சிறந்த கற்றல் அனுபவத்தைப் பெற வழி வகுக்கும். வகுப்பறைகளும், திறமையான ஆசிரியர்களுமே இந்தத் தேவையை நிறைவு செய்து வழிகாட்டும் தூண்டுகோல்கள்.

நாளைய சமுதாயத்தைக் கட்டமைத்து உருவாக்கும் மிகப்பெரிய பொறுப்பு ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவே, அந்தந்த காலகட்டங்களில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்வதும், அதையே ‘கற்றல்’ அனுபவமாக ஏற்றுக்கொள்வதும் காலத்தின் கட்டாயமாகிறது. 

Comments

  1. சமயத்திற்கேற்ற அருமையான மெருகூட்ட ப்பட்ட பதிவு. வாழ்க வளமுடன்

    ReplyDelete
  2. Excellent der
    Very much apt to this situation
    Hats off to u dear

    ReplyDelete
  3. ஆசிரியர் தினத்தன்று அருமையான பதிவு. 👌👌👌

    ReplyDelete
  4. மிகவும் அருமையான பதிவு.
    கட்டுரையின் முதல் பாகம்
    அனைத்து ஆசிரியர்களின்
    இன்றைய ஏக்கத்தை வெளிப்படுத்துவாக உள்ளது.

    ReplyDelete
  5. Each and every word inspired me.superb padhivu.credit goes to every teacher.my sincere wish to my dear uma🌷🌷🌷🌷🌷🌷🌷

    ReplyDelete
  6. அருமையான பதிவு. நல் வாழ்த்துக்கள் உமா

    ReplyDelete
  7. அருமையான பதிவு. ஆசிரியர் தின வாழ்த்துகள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாய்மையைப் போற்றுதும்...! தாய்மையைப் போற்றுதும்...!

உதடுகளாலும் நினைவுகளாலும் என்றுமே என்னை ஆசிர்வதிக்கும் அம்மாவுக்கு இறைவன், தான் எல்லோரிடமும் அன்பு செய்யும் பொருட்டு தாயைப் படைத்தான்...!  படைக்கும் பிரமனுக்குச் சமமாகத் தாய் என்பவள் போற்றப்படக் காரணம், பெருவரமான  `தாய்மை`. தாயை மதித்துப் போற்றும் பண்பாலேயே பிறந்த நாட்டைத்  தாய்நாடு எனவும்,உதடுகள் இணைந்து ஒலிக்கும் முதல் மொழியைத் தாய்மொழி எனவும் கூறி பெருமிதம் கொள்கிறோம். சங்ககாலம் முதற் தொட்டு இக்காலம் வரை தாய்மையைப் பாடாத கவி  ஞ ர்களைத் தேடிக் கண்டெடுக்க வேண்டும்...! தாய்மையைப்  பேசவும் எழுதவும் எல்லை என்பதேது? எச்சூழ்நிலையிலும் வெறுக்காது நம்மை ஏற்றுக் கொள்ளும் தன்னலமில்லா அன்புகொண்டவள் அன்னை. ஐ ந்தறிவு கொண்ட உயிரினங்களும் பகுத்தறிவு பெறும்_  ``தாய்மை` என்ற பேறு கொள்ளும்போது...! தாயை இறைவனாகக்  காண்பது பொதுநிலை .அந்த இறைவனையே தாயாய் நினைத்து உள்ளம் உருகுதல் பெருநிலை .கருணையின் வடிவமான இறைவனையே,தாய்மை நிலைக்கு  அழைத்துச்  சென்று அவனையே தாய்மையை உணரச்  செய்வது, அனைத்துக்கும் அப்பாற்பட்ட வேறுநிலை . ...

வாய்க்காலும் பனைமரமும் உணர்த்தும் நட்பு...!

இரு உயிர்களுக்கு இடையே காணப்படும் ஒன்றுபட்ட, ஒத்த உணர்வும் எண்ணங்களும் ' நட்பு ' என்னும் சொல்லுக்குப் பாலமாய் அமைகின்றன. சங்ககால இலக்கிய மாந்தர்களான கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார் அதியமான் - ஒளவையார் பாரி - கபிலர் ஆகியோர் அரசர்களுக்கும் புலவர்களுக்கும் இடையேயான மாசற்ற, இழிவற்ற, சுயநலமற்ற  நட்பினைப்  பறை சாற்றுவோராவர். ' ஒருவர்  பொறை இருவர் நட்பு ' எனக் கூறும் நாலடியார் நட்பின் அடிப்படைத் தன்மையாகப் ' பொறுத்தல் ' என்ற பண்பைக் குறிக்கிறது. நட்பு, நட்பாராய்தல், கூடாநட்பு, தீ நட்பு முதலியன பற்றி அறநூல்கள் பலவும் பலவிதமாக விளக்கினாலும், 'நாலடியார் 'கூறும் இவ்விரு பாடல்களும், இன்றைய வாழ்வியலோடு மிகவும் பொருத்தமானதாகவும், உளவியல் தன்மை கொண்டதாகவும் விளங்குகிறது. நாய்க்கால் சிறுவிரல் போல் நன் கணியாராயினும் ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்? சேய்த்தானும் சென்று கொளல் வேண்டும், செய்வினைக்கும் வாய்க்கால் அனையார் தொடர்பு.  (நாலடியார் 218) நாயின் காலில் இருக்கும் சிறிய விரல்களைப் போல, மிகுந்த நெருக்கம் உடையவராய்ப் பழகும் பலர், ஈயின் காலளவு கூட உதவி செய்யா ...

கல்விக்கு வழிகாட்டும் வள்ளுவம்...!

வெள்ளத்தால் போகாது வெந்தணலால் வேகாது வேந்தராலும் கொள்ளத்தான் முடியாது  கொடுத்தாலும் நிறைவொழியக் குறைபடாது கள்ளர்கோ மிக அரிது காவலோ மிக எளிது கல்வி என்னும் உள்ளத்தே பொருளிருக்க உலகெலாம் பொருள் தேடி உழல்வதேனோ...!  - விவேக சிந்தாமணி திருக்குறள் என்பது அறநூல்களின் அறிவுச்சுரங்கம். அந்த அறிவுச்சுரங்கத்தில் காணக்கிடக்கும் அதிகாரங்கள் பற்பல. கல்வி,கல்லாமை,கேள்வி,அறிவுடைமை போன்ற அதிகாரங்கள் அனைத்துமே கல்வியின் தொடர்புடையதாய் இருப்பினும் 'கல்வி' என்ற அதிகாரத்தில் கூறப்பட்ட வள்ளுவத்தின் வழிகாட்டலைக் கூறுவதே இக்கட்டுரையின் நோக்கம். இரண்டடி குறள் வெண்பாவால் ஆன திருக்குறளில், அந்தந்த காலத்திற்கேற்ற செய்திகள் வழிகாட்டுதல்கள் ஆகியவை நிரம்பி வழிகின்றன. 'கண்டதைப் படிக்கப் பண்டிதன் ஆவான்' என்ற சொல்வழக்கு ஒன்று உண்டு. 'கண்டு அதைப் படிக்கப் படிக்கப் பண்டிதன் ஆவான்' என்பதே சரி. கண்ட நூல்களை எல்லாம் கற்பதால் பயனில்லை. பாகுபாடு அறிந்து கற்கத் தகுந்த நூல்களைக் கற்பதால் மட்டுமே அறிவு வளர்ச்சி பெறும். இல்லையானால் காலமும் முயற்சியும் வீணாகும். அப்படித் தேர்ந்தெடுத்துப் படிக்கும் நூல்களை...