Skip to main content

சைவமும், தமிழ் இலக்கண இலக்கியங்களும் – ஓர் பார்வை



சைவம்’ என்ற சொல்லுக்கு சிவ சம்பந்தம் உடையது’ என்பது பொருளாகும். சிவனுடன் ஒன்றி இருப்பதான நிலையேசைவம்’ என்கிறார் திருமூலர். பன்னிரு திருமுறைகளும் பதினான்கு சாத்திரங்களும் சிவ சம்பந்தம் உடையன.

சித்தாந்தம்’ என்பது முடிந்த முடிவு’.  எந்த ஒரு பொருளைப் பற்றியும் முதலில் கொள்ளப்படுவது முடிவு. பின் நன்கு ஆராய்ந்து இறுதியாக கொள்ளப்படுவது முடிந்த முடிவு. சில சமயம் முதல் முடிவே முடிந்த முடிவாகவும் இருக்கலாம். எனினும் ஆராயாமல் கொள்ளப்பட்ட நிலையாக இல்லாமல் நிலைத்து நிற்கும் முடிவாகி நிகழுமாயின் அதுவே முடிந்த முடிவாகும். எனவே சித்தாந்தம் என்பது முடிந்த முடிவாகிறது .(சைவ சமய விளக்கு நா. சுப்புரெட்டியார்).

சுருங்கக் கூறின் அப்பர் ,சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் போன்ற சமயக் குரவர்களும், மெய்கண்டார், அருள்நந்தி சிவம். மறைஞான சம்பந்தர், உமாபதி சிவம் போன்ற சந்தான ஆசிரியர்களாலும், வழிவந்த அருட்பெரும் சான்றோர்களும் பரப்பி வழங்கப்பெற்றது சைவ சித்தாந்தம்.

வடமொழியில் உபநிடதங்களிலும் வேறு பல வேத நூல்களிலும் சைவ சித்தாந்தத்தின் அடிப்படை கருத்துகள் இங்கொன்றும் அங்கொன்றுமாக சிதறிக் கிடந்தாலும் வேத காலத்திலோ அதற்குப் பிற்பட்ட காலத்திலோ இந்தத்தத்துவம் பற்றிய நூல்கள் எவையும் இல்லை என்கிறார் மறைமலைஅடிகள்.

சித்தாந்த நெறி தமிழகத்திலும் தமிழ் மொழியிலும் தோன்றியதாகும் என்கிறார் எஸ்.என். தாஸ் குப்தா.( ஹிஸ்டரி ஆப் இந்தியன் பிலாசபி) இவருடைய கூற்றின் வாயிலாக சைவசித்தாந்த கொள்கைகள் தமிழர்க்கே உரிய தனிச் சிறப்புடையதாகும் எனக் கூறலாம்.

சைவ சித்தாந்தம்என்னும் அரிய பெரிய தத்துவ கொள்கையானது தமிழ் மக்களின் பேரறிவின் பெரும் பயனாகும்.  இந்திய நாட்டிலுள்ள சமயங்கள் எல்லாவற்றிலும் சைவ சமயமே மிக விரிந்தது. பெரும்பான்மையான மக்களால் தழுவப் பெற்றதும் ,தமிழ் மக்களின் உள்ளங்களைப்  பெரிதும் கவர்ந்து அரசு வீற்றிருப்பதுமாய் உள்ளது என்கிறார்  ஜி. யு. போப்.  மனிதகுலத்தின் சிந்தனையிலே முழு நிறைவான, முழுவதுமாகப் பெரிதும் மதித்துப்போற்றத்தக்கதாக விளங்குவது சைவ சித்தாந்தமே ஆகும் என்று கமின் சுலபலும் குறிப்பிட்டுள்ளார். (மேற்கோள் ந.ரா. முருகவேல் சைவ சித்தாந்தம்) இவை சைவ சித்தாந்தம் பற்றிய மேனாட்டு அறிஞர்களின் கருத்துகளாகும். 

தொல்காப்பியமும் தமிழும்:

தமிழில் இலக்கணம் இலக்கியம் என்ற இரு நிலைகளில் போற்றப்படுகின்ற முதல் நூலான தொல்காப்பியத்தில் சைவசித்தாந்த கருத்துக்கள் நிரம்ப இடம் பெற்றுள்ளன.

‘உயிர் மெய் அல்லன

மொழி முதல் ஆகா’

 என்ற நூற்பா மூலம் தாமே தனித்து இயங்க வல்ல எழுத்துகளுக்குஉயிர் என்றும் உயிரோடு கூடி அல்லது இயங்க இயலாத எழுத்துக்களுக்கு ‘மெய் என்றும் சமய தத்துவ கருத்தின் அடிப்படையில் பெயர்கள் அமைக்கப்பட்டுள்ளதை அறியமுடிகிறது.

‘மெய்யின் இயக்கம் அகரமொடு சிவனும்’

 என்ற நூற்பாவில் மெய்களின் ஒலிப்பும், அசைவும் அகர எழுத்தினைச் சார்ந்து பொருந்தியே அமையும் என்பதை அறியலாம். உயிருள்ள, உயிரற்ற உயர்திணை, அஃறிணை என எல்லாவற்றிலும் இறைவன் இரண்டற கலந்தவனாக இருப்பது போல், அகரமும் மெய்யொடு கலந்து அதன் தன்மையைப் பெற்றதாகிறது.

 அகரமுதல’ எனத் தொடங்கும் குறட்பாவும் இதனை மெய்ப்பிக்கும். எழுத்துகளில் ‘அகரம்’ ஆகின்றேன் நானே என்ற கண்ணனின் கூற்றும் இதனைப் பிரதிபலிக்கிறது.(தொல்காப்பியம் எழுத்ததிகாரம் – நச்சினார்க்கினியர் உரை)

  ‘எல்லா மொழிக்கும் உயிர் வருவழியே

 உடம்படுமெய்யின் உருபுகொளல் வரையார்

  என்ற நூற்பாவின் மூலம் உயிரும் உயிரும் தம்முள் ஒன்று சேர மாட்டா. ஆதலின் அவற்றிற்குப் பற்றுக்கோடாக ஓர் உடல் இன்றியமையாது தேவைப்படும். உயிர் சேர்த்ததற்கு உடல் இன்றியமையாதது ஓர் உடலைப்பற்றி நின்றே உயிரானது இயங்கும் என்னும் தத்துவ நூல் பொருளும் அமைந்துள்ளமையைக் காணமுடிகின்றது.(தொல்காப்பியம் – எழுத்ததிகாரம்)

 

 வினையின் நீங்கிய விளங்கிய அறிவின்

 முனைவன் கண்டது முதல் நூல் ஆகும்

என்ற நூற்பா இறை இலக்கணத்தை உணர்த்துவதாய் அமைந்துள்ளது.

ஒன்றே லேறே என்றிரு பால் வயின்

ஒன்றியுயர்ந்த  பாலது ஆணையின்

 ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப

 மிக்கோன் ஆயினும் கடி வரை இன்றே

என்ற நூற்பா மூலம் கடவுள் ஆணையால் தலைவனும் தலைவியும் ஊழ்வினை மூலம் ஒருவரை ஒருவர் காண்பர் என்று கூறப்பட்டுள்ளது.

  சைவ சித்தாந்த கருத்துக்களுள் உயிர் நாடியாக விளங்கும், உயிர்கள் இரு வினைகளுக்கு ஏற்ப இயங்குகின்றன என்ற கருத்து இதன் மூலம் பெறப்படுகிறது.

 

'காலம் உலகம் உயிரே உடம்பே

பால் வரை தெய்வம் வினையே பூதம்

 ஞாயிறு திங்கள் சொல் என வரூஉம்

 ஆயீரைந் தொடு பிறவும் அன்ன

 ஆவயின் வரூஉம் கிளவி எல்லாம்

 பால் பிரிந்து இசையா உயர்திணை மேன

  என்ற நூற்பாவில் சைவசித்தாந்தத்தின் உயிர்நாடியாக விளங்கும் காலம், உலகம், உயிர், உடம்பு, தெய்வம், வினை, பூதம் போன்ற பல சொற்களைத் தொல்காப்பியர் கூறியிருக்கின்றார். இவ்வகையில் தொல்காப்பிய நூற்பாக்களைப் பல இடங்களில் உற்று நோக்கின் ஆங்காங்கு சைவ சித்தாந்த கருத்துக்கள் ஊடுருவி இலை மறை காய் மறையாய் இருப்பதை அறியலாம்.

 

சங்க இலக்கியக் காலமும் சைவ நெறியும்:

 சங்க இலக்கிய சான்றுகள் சிலவற்றின் மூலம் சங்ககால தமிழரிடம் கடவுளைப் பற்றிய சிந்தனையும் சமயக் கோட்பாடுகளும் சைவ வழிபாடும் இருந்திருக்கின்றன என்பதையும்,  அருவ வழிபாட்டு முறையுடன் உருவ வழிபாட்டு முறைகளும் இருந்திருக்கின்றன என்பதையும் அறியலாம்.  வீடுபேறு, மறுபிறவி இருவினை முதலிய சிந்தனைகளும் இருந்திருக்கின்றன என்பதையும், சைவம் பெரும்பான்மை மக்களின் சமயமாக இருந்து இருக்கின்றது என்ற செய்திகளையும் அறியமுடிகின்றது.

 ‘நீரும் நிலனும் தீயும் வளியும்

மாக விசும்போடடைந்துடன் இயற்றிய

 மழுவாள் நெடியோன் தலைவனாக’

 என்ற மதுரைக்காஞ்சியின் அடிகளால்  பதி, பசு,பாசம் என்ற முப்பொருள்களின் இயல்பினைச் சுட்டும் சைவ சித்தாந்த கருத்தை அறியலாம். அம்முப்பொருள்களின் முதற் பொருளான பதி இறைவன் சிவன் அனைத்து பொருள்களுக்கும் மேலானவன் என்பதையும் அறிய முடிகிறது.

' மாசற விளங்கிய யாக்கையர் சூழ் சுடர்

 வாடாப் பூவின் இமையா நாட்டத்து

 நாற்ற உணவின் உருகெழு பெரியோர்'

 என்ற மதுரைக்காஞ்சி அடிகள் சிவன் அனைவருக்கும் மேலானவன் என்ற கருத்தைக் கூறுகிறது.

 சிவபெருமான் கல்லால மரத்தின் கீழ் இருந்து வேதம் உரைத்த செய்தியை,

'ஞாலம் நாறும் நலங்கெழு நல்லிசை

 நான்மையு முதுநூல் முக்கட் செல்வன்

 ஆலமுற்றம்'

என்ற அகநானூற்று அடிகள் கூறுகின்றன.

 

 இம்மை மறுமை பற்றிய செய்திகள் இப்பிறப்பில் செய்யக்கூடியவை மறு பிறப்பிற்கு ஏதுவாகும் என்ற சைவ சித்தாந்த செய்தியை ,

இம்மை செய்தது மறுமைக் காமெனும்’ என்ற புறநானூற்று அடி கூறுகின்றது. இவ்வாறாக இம்மை மறுமை நல்வினை தீவினை முதலிய சைவ சித்தாந்த கருத்துக்கள் சங்க இலக்கியங்களில் ஆங்காங்கு ஊடுருவி இருப்பதை காணமுடிகிறது.

 

 சங்கம் மருவிய காலம் - திருக்குறளில் சைவ சித்தாந்த கொள்கை

 திருக்குறள் முதலிய பதினெண் கீழ்க்கணக்கு நூல்களும் சிலப்பதிகாரம்,  மணிமேகலை என்ற இரட்டை காப்பியங்களும், திருமந்திரம் என்னும் சாத்திர நூலும் சங்கமருவிய காலத்து நூல்களாகும் . இவற்றிலும் சைவசித்தாந்தக் கருத்துக்கள் நன்கு விளக்கப்படுகின்றன.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

 பகவன் முதற்றே உலகு

எழுத்துக்களுக்கெல்லாம் அகரம் முதலாக இருப்பது போன்று உலகிற்கு முதலாக ஆதிபகவன் ஆகிய இறைவன் இருக்கிறான் என்பது குறளின் கருத்து.  இதனால் உலகிற்குக் கடவுள் நிமித்த காரணன் என்னும் சைவ சித்தாந்த கருத்து தெளிவடைகிறது.

 

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது

 இன்னுயிர் நீக்கும் வினை’

 என்ற குறள் சைவ சித்தாந்த கருத்தான கொல்லாமையைக் குறிப்பிடுகிறது.

 ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க

 சான்றோர் பழிக்கும் வினை’

என்ற குறளில் வினைத்தூய்மை என்ற சைவ சித்தாந்த கருத்து கூறப்படுகிறது.

'அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு

இவ்வுலகம் இல்லாகி யாங்கு'

என்ற குறள் கருத்து

‘அருளிற் பெரிய தகிலத்து இல்வேண்டும்

 பொருளிற்றலையிலது போல்’

 என்ற உமாபதி சிவாச்சாரியார் கருத்துடன் பொருந்துகிறது.

அருள்’ என்பது சைவசித்தாந்தத்தில் இறைவன் உயிர்களுக்கு அளிக்கக்கூடிய மிகப்பெரிய நிலையாகும். அவ்வருளைப் பெறுவதற்குரிய செயலை உயிர்கள் மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்து உணரப்படுகிறது.

‘ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்

 எழுமையும் ஏமாப்பு உடைத்து'

 என்ற குறளோடு

புலன் அடக்கித்தம்முதற்கட் புக்குறுவார் போதார்

 தலம் நடக்கும் ஆமைதக’

 என்ற திருவருட்பயன் கருத்தோடு ஒப்புமை உடையதாக உள்ளது.

 

'இரட்டைக் காப்பியங்கள்’ என்று கூறப்படுகின்ற சிலப்பதிகாரம், மணிமேகலை என்ற இரு நூல்களிலும் சைவ சித்தாந்த கருத்துக்கள் அமைந்துள்ளன.

பிறவா யாக்கை பெரியோன் கோயிலும்’

 என்று வருகின்ற சிலப்பதிகார இந்திர விழா எடுத்த காதை அடிபிறவா யாக்கைப் பெரியோன்’ என்று சிவபெருமானைக் குறிப்பிடுகிறது. சிவபெருமானை நடனமாடும் கடவுளாக நிலைநாட்டுவது சிலப்பதிகாரமே.

 திருமூலரின் திருமந்திரத்தில் சைவ சித்தாந்த கருத்துக்கள் நிரம்ப இடம் பெற்றுள்ளன. இந்நூலின் விளக்கமாகவே சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கும் அமைந்துள்ளன என்று கூறலாம்.

‘பசுப்பல கோடி பிரம்மன் முதலாய்ப்

பசுக்களை கட்டிய பாச மூன்றுண்டு

பசுத்தன்மை நீக்கியப் பாசம் அறுத்தாற்

பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே’

என்ற திருமந்திரப் பாடலில் சைவசித்தாந்தத்தில் பொருள்களான பதி ,பசு, பாசம் என்பவை பற்றிக்கூறப்பட்டுள்ளன. பசு,  பாசம் முதலியவற்றை நீக்கி விட்டால் பதியை அடையும் என்று கூறியுள்ளார்.


'சிவாய நமவென்று சித்தம் ஒருக்கி

அவாயம் அறவே யடிமைய தாக்கிச்

சிவாய சிவசிவவென் றென்றே சிந்தை

அவாயம் கெடனீற்க ஆனந்த மாமே’

 என்ற பாடல் சைவசித்தாந்தத்தின் உயிர்நாடியாக விளங்கும் பஞ்சாட்சர மந்திரத்தைக் கூறுகின்றது.

 

கங்காளன் பூசுமங் கவசத் திருநீற்றை

 மங்காமற் பூசி மகிழ்வரே யாமாகில்

 தங்கா வினைகளும் சாருஞ் சிவகதி

 சிங்கார மான திருவடி சேர்வரே’

என்ற திருமந்திரப் பாடல் திருநீறு திருவடி சேர்ப்பிக்கும் என்ற செய்தியைக் கூறுகிறது.  இச்செய்தி சைவசித்தாந்தத்தில் கூறப்படும் சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம் என்ற நான்கு வகை பதவிகளில் நான்காவதாக உள்ள சாயுஜ்ய பதவியை அடைவதற்கான வழி முறையை கூறுவதாய் அமைந்துள்ளது.

 

தேவார திருவாசகக் காலம்:

திருநாவுக்கரசர், ஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் போன்றோருடைய வாழ்வே ஒரு பெரும் இலக்கியம்.  சைவ சித்தாந்தம் அதிலிருந்து வடித்தெடுத்த சிறந்த இலக்கணம்.( ந. ரா. முருகவேல் – சைவ சித்தாந்தம்)

அங்க அடையாளங்களுடன் கூடிய இறைவனின் தோற்றம் இல்லாமல் பக்தி என்னும் உணர்ச்சி பெருக முடியாது.  இப்படிப்பட்ட இறைவனை முன்வைக்காமல் பக்தி உணர்வைப் பெருக்கெடுக்க செய்யமுடியாது என்பது நாயன்மார்களின் கருத்து.

மண் மகிழ்ந்த அரவம் மலர்க் கொன்றை

 மலிந்த வரை மார்பின்

 பெண் மகிழ்ந்த பிரான்’

என்ற திருஞான சம்பந்தரின் தேவாரப் பாடல் இறைவன் வேண்டுதல் வேண்டாமை இலான் என்பதைக் குறிப்பால் உணர்த்துகிறது. அச்சுறுத்தும் நஞ்சுடைய பாம்பினையும் மணம் வீசி மகிழ்வு தரும் கொன்றையையும் முறையே வெறுப்பும் விருப்பும் இன்றி தன் மார்பில் அணிந்தவன் சிவபெருமான் என்பது பாடலின் பொருள்.

புந்தி ஒன்றி நினைவார் வினை ஆயின

 தீர பொருளாய

 அந்தி அன்னதொரு பேரொளி யான்’

என்ற பாடல் மனம் பொறி வழி சென்று பொருள்களைப் பற்றாமல் ஒருமையாக நின்று தியானிக்கும் அடியார்களுக்கு அவர்களுடைய வினைகள் தீரும் படி தியானிக்கும் பொருளாகி விளங்குகின்ற செம்மேனி அம்மான் இறைவன் என்பதனை கூறுகின்றது.  இக்கருத்து சைவசித்தாந்த கருத்தோடு தொடர்புடையதாக அமைகிறது.


‘பொய்யஞ்சி வாய்மைகள் பேசிப்

 புகழ்புரிந்தார்க்கு அருள் செய்யும்

ஐயஞ்சி அப்புறத்தானும்

 ஆரூர் அமர்ந்த அம்மானே’

 பொய் கூற அஞ்சியும் உண்மையே பேசியும் பொருள்சேர் புகழை, இடைவிடாமல் சொல்லியும் துதிக்கின்ற அடியவர்களுக்கு அருள் செய்கின்ற எளிமையாளனாக இறைவன் இருக்கிறான் என்கிறார் திருநாவுக்கரசர்.

 

ஐவர் கொண்டிங்காட்ட ஆடி

ஆழ் குழிப்பட்டழுந்து வேனுக்கு

 உய்யு மாறு ஒன்றருளிச் செய்யீர்

 ஓண காந்தன் தளியு ளீரே’

 என்ற பாடலில் ஐம்பொறிகள் ஆகிய வேடர்கள் என்னை தன் விருப்பம்போல் ஆட்டுவிக்கின்றனர். அதன்படியே நான் ஆடுகின்றேன். பிறவியாகிய பெருங்குழியில் விழுகின்றேன். கரையில் ஏறும் வழி அறியாமல் மீண்டும் அக்குழியிலேயே அழுந்துகின்றேன். எனவே யான் கடைத்தேறும் வழி ஒன்றினை எனக்கு அருள் செய்வீராக என்று சுந்தரர், ஐம்பொறிகளுக்கு ஆட்பட்டு பசுவாகிய உயிர்கள் மேற்கொள்ளும் செயல்களைப் பற்றி கூறியுள்ளார்.  இக்கருத்து சித்தாந்தத்தின் மையக்கருத்தாக இருக்கிறது.


மறைந்திட மூடிய மாய இருளை

 அறம் பாவம் என்னும் அருங் கயிற்றால் கட்டி

 புறந்தோல் போர்த்தெங்கும் புழு அழுக்கு மூடி

 மலஞ் சோறும் ஒன்பது வாயிற் குடிலை’

 என்ற திருவாசகப் பாடல் சைவசித்தாந்தத்தில் கூறப்படும் மூவகை மலங்களைக் குறிப்பிடுகின்றது.

 

‘தென்னாடுடைய சிவனே போற்றி!

 எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!’

 என்று கூறும் மாணிக்க வாசகர் சிவன் தென்னாட்டிற்குச் சொந்தமானவன் என்றும் அவன் எந்நாட்டவர்க்கும் உரிமையானவர் என்றும் வரையறை செய்கிறார். இவ்வாறு தேவார திருவாசக பாடல்கள் சைவ சமயத்தின் கருத்துக்களைப்  பிரதிபலிக்கின்றன.


பழங்காலம் தொட்டே தமிழ்நாட்டில் சிவ வழிபாடு இருந்தது என்றும் சிவபெருமானை முழுமுதற் கடவுளாகவும்,  ஆடவல்லான் ஆகவும், தமிழர்கள் கொண்டாடினர் என்றும் இறைவனுடைய புகழைப் பாடிப் பரவும் அடியார்கள் இருந்தனர் என்பதையும் இதன் மூலம் அறிய முடிகிறது. இவ்வாறு பற்பல சான்றுகளை நிறுவுகின்றன தமிழ் இலக்கியங்கள்.  

சைவமும் தமிழும் வெவ்வேறல்ல ஒன்றே.

Comments

  1. Gone very deep into the Illakkiyangal. Nice to read. Learnt new things from your writeup. Thank you

    ReplyDelete
  2. அழகு த் தமிழில் விளக்கங்கள் அருமையிலும் அருமை, தேவாரம், திருவாசகம், திருக்குறள் படிக்க படிக்க தெகிட்டாத தேன், தொடரட்டும் உனது தமிழ் பணி, வாழ்க வளமுடன்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாய்மையைப் போற்றுதும்...! தாய்மையைப் போற்றுதும்...!

உதடுகளாலும் நினைவுகளாலும் என்றுமே என்னை ஆசிர்வதிக்கும் அம்மாவுக்கு இறைவன், தான் எல்லோரிடமும் அன்பு செய்யும் பொருட்டு தாயைப் படைத்தான்...!  படைக்கும் பிரமனுக்குச் சமமாகத் தாய் என்பவள் போற்றப்படக் காரணம், பெருவரமான  `தாய்மை`. தாயை மதித்துப் போற்றும் பண்பாலேயே பிறந்த நாட்டைத்  தாய்நாடு எனவும்,உதடுகள் இணைந்து ஒலிக்கும் முதல் மொழியைத் தாய்மொழி எனவும் கூறி பெருமிதம் கொள்கிறோம். சங்ககாலம் முதற் தொட்டு இக்காலம் வரை தாய்மையைப் பாடாத கவி  ஞ ர்களைத் தேடிக் கண்டெடுக்க வேண்டும்...! தாய்மையைப்  பேசவும் எழுதவும் எல்லை என்பதேது? எச்சூழ்நிலையிலும் வெறுக்காது நம்மை ஏற்றுக் கொள்ளும் தன்னலமில்லா அன்புகொண்டவள் அன்னை. ஐ ந்தறிவு கொண்ட உயிரினங்களும் பகுத்தறிவு பெறும்_  ``தாய்மை` என்ற பேறு கொள்ளும்போது...! தாயை இறைவனாகக்  காண்பது பொதுநிலை .அந்த இறைவனையே தாயாய் நினைத்து உள்ளம் உருகுதல் பெருநிலை .கருணையின் வடிவமான இறைவனையே,தாய்மை நிலைக்கு  அழைத்துச்  சென்று அவனையே தாய்மையை உணரச்  செய்வது, அனைத்துக்கும் அப்பாற்பட்ட வேறுநிலை . ...

வாய்க்காலும் பனைமரமும் உணர்த்தும் நட்பு...!

இரு உயிர்களுக்கு இடையே காணப்படும் ஒன்றுபட்ட, ஒத்த உணர்வும் எண்ணங்களும் ' நட்பு ' என்னும் சொல்லுக்குப் பாலமாய் அமைகின்றன. சங்ககால இலக்கிய மாந்தர்களான கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார் அதியமான் - ஒளவையார் பாரி - கபிலர் ஆகியோர் அரசர்களுக்கும் புலவர்களுக்கும் இடையேயான மாசற்ற, இழிவற்ற, சுயநலமற்ற  நட்பினைப்  பறை சாற்றுவோராவர். ' ஒருவர்  பொறை இருவர் நட்பு ' எனக் கூறும் நாலடியார் நட்பின் அடிப்படைத் தன்மையாகப் ' பொறுத்தல் ' என்ற பண்பைக் குறிக்கிறது. நட்பு, நட்பாராய்தல், கூடாநட்பு, தீ நட்பு முதலியன பற்றி அறநூல்கள் பலவும் பலவிதமாக விளக்கினாலும், 'நாலடியார் 'கூறும் இவ்விரு பாடல்களும், இன்றைய வாழ்வியலோடு மிகவும் பொருத்தமானதாகவும், உளவியல் தன்மை கொண்டதாகவும் விளங்குகிறது. நாய்க்கால் சிறுவிரல் போல் நன் கணியாராயினும் ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்? சேய்த்தானும் சென்று கொளல் வேண்டும், செய்வினைக்கும் வாய்க்கால் அனையார் தொடர்பு.  (நாலடியார் 218) நாயின் காலில் இருக்கும் சிறிய விரல்களைப் போல, மிகுந்த நெருக்கம் உடையவராய்ப் பழகும் பலர், ஈயின் காலளவு கூட உதவி செய்யா ...

கல்விக்கு வழிகாட்டும் வள்ளுவம்...!

வெள்ளத்தால் போகாது வெந்தணலால் வேகாது வேந்தராலும் கொள்ளத்தான் முடியாது  கொடுத்தாலும் நிறைவொழியக் குறைபடாது கள்ளர்கோ மிக அரிது காவலோ மிக எளிது கல்வி என்னும் உள்ளத்தே பொருளிருக்க உலகெலாம் பொருள் தேடி உழல்வதேனோ...!  - விவேக சிந்தாமணி திருக்குறள் என்பது அறநூல்களின் அறிவுச்சுரங்கம். அந்த அறிவுச்சுரங்கத்தில் காணக்கிடக்கும் அதிகாரங்கள் பற்பல. கல்வி,கல்லாமை,கேள்வி,அறிவுடைமை போன்ற அதிகாரங்கள் அனைத்துமே கல்வியின் தொடர்புடையதாய் இருப்பினும் 'கல்வி' என்ற அதிகாரத்தில் கூறப்பட்ட வள்ளுவத்தின் வழிகாட்டலைக் கூறுவதே இக்கட்டுரையின் நோக்கம். இரண்டடி குறள் வெண்பாவால் ஆன திருக்குறளில், அந்தந்த காலத்திற்கேற்ற செய்திகள் வழிகாட்டுதல்கள் ஆகியவை நிரம்பி வழிகின்றன. 'கண்டதைப் படிக்கப் பண்டிதன் ஆவான்' என்ற சொல்வழக்கு ஒன்று உண்டு. 'கண்டு அதைப் படிக்கப் படிக்கப் பண்டிதன் ஆவான்' என்பதே சரி. கண்ட நூல்களை எல்லாம் கற்பதால் பயனில்லை. பாகுபாடு அறிந்து கற்கத் தகுந்த நூல்களைக் கற்பதால் மட்டுமே அறிவு வளர்ச்சி பெறும். இல்லையானால் காலமும் முயற்சியும் வீணாகும். அப்படித் தேர்ந்தெடுத்துப் படிக்கும் நூல்களை...