Skip to main content

தாய்மையைப் போற்றுதும்...! தாய்மையைப் போற்றுதும்...!

உதடுகளாலும் நினைவுகளாலும் என்றுமே என்னை ஆசிர்வதிக்கும் அம்மாவுக்கு



இறைவன், தான் எல்லோரிடமும் அன்பு செய்யும் பொருட்டு தாயைப் படைத்தான்...!  படைக்கும் பிரமனுக்குச் சமமாகத் தாய் என்பவள் போற்றப்படக் காரணம், பெருவரமான  `தாய்மை`.
தாயை மதித்துப் போற்றும் பண்பாலேயே பிறந்த நாட்டைத்  தாய்நாடு எனவும்,உதடுகள் இணைந்து ஒலிக்கும் முதல் மொழியைத் தாய்மொழி எனவும் கூறி பெருமிதம் கொள்கிறோம்.

சங்ககாலம் முதற் தொட்டு இக்காலம் வரை தாய்மையைப் பாடாத கவி  ஞ ர்களைத் தேடிக் கண்டெடுக்க வேண்டும்...!

தாய்மையைப்  பேசவும் எழுதவும் எல்லை என்பதேது? எச்சூழ்நிலையிலும் வெறுக்காது நம்மை ஏற்றுக் கொள்ளும் தன்னலமில்லா அன்புகொண்டவள் அன்னை.

ஐ ந்தறிவு கொண்ட உயிரினங்களும் பகுத்தறிவு பெறும்_  ``தாய்மை` என்ற பேறு கொள்ளும்போது...!

தாயை இறைவனாகக்  காண்பது பொதுநிலை.அந்த இறைவனையே தாயாய் நினைத்து உள்ளம் உருகுதல் பெருநிலை.கருணையின் வடிவமான இறைவனையே,தாய்மை நிலைக்கு  அழைத்துச்  சென்று அவனையே தாய்மையை உணரச்  செய்வது, அனைத்துக்கும் அப்பாற்பட்ட வேறுநிலை.
  
இந்நிலைகள்  மூலம் `இறையன்பினும் உயர்ந்தது தாயன்பு` என்பதை நிறுவுகின்றன நம் பக்தி இலக்கியங்கள்...!

சீதகளப்ப செந்தாமரை..... எனத் தொடங்கும் 'விநாயகர் அகவல்' பாடலில் 'தாயாய்' எனக்குத் தானெழுந்தருளி' என இறைவனை இறைஞ்சுகிறார் பெண் கவி அவ்வையார்.

'திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்' எனச் சிறப்பிக்கப்படும் திருவாசகத்தில் 'அம்மையே அப்பா ஒப்பிலா மணியே...' எனச் சிவபெருமானைக் கண்டு உருகுகிறார், மாணிக்கவாசகர்.

பசியால் அழுத பிள்ளைக்கு 'ஞானப்பால்' ஊட்டி பாலறாவாயனாக விளங்கிய திருஞானசம்பந்தருக்கு அருள் பாலித்ததும் உலகாளும் உமையன்னை அல்லவா? 
(முதல் திருமுறை - தேவாரம் - திருஞானசம்பந்தர்)
               
'தாயிற் சிறந்த கோயிலுமில்லை' என்ற மொழிக்கிணங்க கோயிலில் உறையும் தந்தையே(சிவபெருமான்) தன் பக்தையின் குறைதீர்க்க, தாயுருவில் தாயுமானவனாய் (மாத்ரு பூதேஸ்வரர்) வந்து மகப்பேறு பார்த்த நிகழ்வு தாய்மையின் சிறப்பை இவ்வுலகிற்குப் பறைசாற்றும் முயற்சி தானே...! (முதல் திருமுறை_தேவாரம்_திருஞானசம்பந்தர்) (திருச்சி-மலைக்கோட்டை அடிவாரம்-தாயுமானவர் கோவில்)

இப்பெருநிலை ஒருபுறம் இருக்க, இறைவனையே தாய்மையை உணரச் செய்த வேறுநிலை...இதோ...!
சிவபெருமான் மீது கொண்ட அதீத பக்தியால் இறைவன் வாழும் கைலாய மலையில் தன் கால் படக்கூடாது எனத் தலையாலேயே நடந்து சென்றவர் `காரைக்கால் அம்மையார்` என அழைக்கப்படும் புனிதவதியார். அம்மையாரின் அன்பைக் கண்டு, `பிறவாயாக்கை பெரியோனாகிய பரம்பொருளாலேயே 'அம்மையே' என்று அழைக்கப்பட்ட சிறப்புக்குரியவர்.


இப்படித் தாய்மையின் உணர்வைச் சிறப்பிக்க எவ்வளவோ சான்றுகள் உள்ளன. இறைநிலையைக் கடந்தது தாய்மை

அன்னையர் தினம் என்ற ஒருநாளோடு நிறைவடையாமல் என்றுமே தாய்மையைப் போற்றுவோம்...!

ஏனெனில் உலக உயிர்கள் அனைத்துமே உச்சரிக்கும் ஒரு சொல் கவிதை 'அம்மா'!


Comments

  1. உணர்வு பூர்வமான பதிவு

    ReplyDelete
  2. Perfectly written and wonderful Tami, praising Ammakkal, including animals, vazhga valamudan, valarga unathu tamil manam

    ReplyDelete
  3. அருமையான சிந்தனை வாழ்த்துகள்

    ReplyDelete
  4. Well written Uma..Thoroughly enjoyed..You made the womenhood proud..The illustratio s are amazing..Wishig you write more n more..

    ReplyDelete
  5. இதயம் தொட்ட அருமையான பதிவு. வாழ்க வளமுடன்

    ReplyDelete
  6. அருமையான பதிவு 💟💟🌹

    ReplyDelete
  7. மிக அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. அன்பே சிவம் அதுவே தாயன்பு
    உங்களுடை பதிவுகள் அருமை

    ReplyDelete
  9. Wonderful thought

    ReplyDelete
  10. அருமை! வாழ்த்துக்கள்!!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வாய்க்காலும் பனைமரமும் உணர்த்தும் நட்பு...!

இரு உயிர்களுக்கு இடையே காணப்படும் ஒன்றுபட்ட, ஒத்த உணர்வும் எண்ணங்களும் ' நட்பு ' என்னும் சொல்லுக்குப் பாலமாய் அமைகின்றன. சங்ககால இலக்கிய மாந்தர்களான கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார் அதியமான் - ஒளவையார் பாரி - கபிலர் ஆகியோர் அரசர்களுக்கும் புலவர்களுக்கும் இடையேயான மாசற்ற, இழிவற்ற, சுயநலமற்ற  நட்பினைப்  பறை சாற்றுவோராவர். ' ஒருவர்  பொறை இருவர் நட்பு ' எனக் கூறும் நாலடியார் நட்பின் அடிப்படைத் தன்மையாகப் ' பொறுத்தல் ' என்ற பண்பைக் குறிக்கிறது. நட்பு, நட்பாராய்தல், கூடாநட்பு, தீ நட்பு முதலியன பற்றி அறநூல்கள் பலவும் பலவிதமாக விளக்கினாலும், 'நாலடியார் 'கூறும் இவ்விரு பாடல்களும், இன்றைய வாழ்வியலோடு மிகவும் பொருத்தமானதாகவும், உளவியல் தன்மை கொண்டதாகவும் விளங்குகிறது. நாய்க்கால் சிறுவிரல் போல் நன் கணியாராயினும் ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்? சேய்த்தானும் சென்று கொளல் வேண்டும், செய்வினைக்கும் வாய்க்கால் அனையார் தொடர்பு.  (நாலடியார் 218) நாயின் காலில் இருக்கும் சிறிய விரல்களைப் போல, மிகுந்த நெருக்கம் உடையவராய்ப் பழகும் பலர், ஈயின் காலளவு கூட உதவி செய்யா ...

கல்விக்கு வழிகாட்டும் வள்ளுவம்...!

வெள்ளத்தால் போகாது வெந்தணலால் வேகாது வேந்தராலும் கொள்ளத்தான் முடியாது  கொடுத்தாலும் நிறைவொழியக் குறைபடாது கள்ளர்கோ மிக அரிது காவலோ மிக எளிது கல்வி என்னும் உள்ளத்தே பொருளிருக்க உலகெலாம் பொருள் தேடி உழல்வதேனோ...!  - விவேக சிந்தாமணி திருக்குறள் என்பது அறநூல்களின் அறிவுச்சுரங்கம். அந்த அறிவுச்சுரங்கத்தில் காணக்கிடக்கும் அதிகாரங்கள் பற்பல. கல்வி,கல்லாமை,கேள்வி,அறிவுடைமை போன்ற அதிகாரங்கள் அனைத்துமே கல்வியின் தொடர்புடையதாய் இருப்பினும் 'கல்வி' என்ற அதிகாரத்தில் கூறப்பட்ட வள்ளுவத்தின் வழிகாட்டலைக் கூறுவதே இக்கட்டுரையின் நோக்கம். இரண்டடி குறள் வெண்பாவால் ஆன திருக்குறளில், அந்தந்த காலத்திற்கேற்ற செய்திகள் வழிகாட்டுதல்கள் ஆகியவை நிரம்பி வழிகின்றன. 'கண்டதைப் படிக்கப் பண்டிதன் ஆவான்' என்ற சொல்வழக்கு ஒன்று உண்டு. 'கண்டு அதைப் படிக்கப் படிக்கப் பண்டிதன் ஆவான்' என்பதே சரி. கண்ட நூல்களை எல்லாம் கற்பதால் பயனில்லை. பாகுபாடு அறிந்து கற்கத் தகுந்த நூல்களைக் கற்பதால் மட்டுமே அறிவு வளர்ச்சி பெறும். இல்லையானால் காலமும் முயற்சியும் வீணாகும். அப்படித் தேர்ந்தெடுத்துப் படிக்கும் நூல்களை...