Skip to main content

கால் மாறி ஆடிய ஈசன்…….!!!


            ஆயக்கலைகள் 64. இவை அனைத்துமே இறை தன்மையுடையவை. இவற்றுள் நடன கலை என்பது கலைஞரையும் கலையையும் பிரிக்க இயலாத தன்மை உடையது. சான்றாக பிற கலைகளான இசை, ஓவியம், சிற்பம், சமையல் போன்றவற்றில், கலைகளையும் கலைஞர்களையும் வேறுபடுத்தலாம். வேறுபடுத்தினும் அவற்றை நம்மால் ரசிக்க முடியும். நடனக் கலையில் மட்டும் நடனத்தையும் ஆடும் கலைஞரையும் பிரிக்க இயலாது. நடனமும் கலைஞனும் ஒன்றே என்பதானது நடனக்கலை. எனவேதான் ஆடல்வல்லான் நடராஜப் பெருமானும் நடனக்கலைக்குத் தன்னைத் தலைவன் ஆக்கிக்கொண்டார். நடனக்கலை மூலம் மிகப்பெரிய திருவிளையாடலையும் நிகழ்த்தினார்.

 சபேசன் ஆகிய எம்பெருமானுக்கு உகந்த சபைகள் ஐந்து. பொற்சபை, (கனகசபை) வெள்ளி சபை, ரத்ன சபை, தாமிரசபை, சித்திர சபை என்பன.

தில்லை( சிதம்பரம் )அம்பலத்தே பொன்னம்பல பெருமான். மதுரையில் வெள்ளியம்பலத்தான். திருவாலங்காட்டில் வடாரண்யேஸ்வரர் கோயிலில் ரத்ன சபாபதி. நெல்லையப்பர் கோயிலில் தாமிர அம்பலத்தான். குற்றாலம் குற்றாலநாதர் கோயிலில் சித்திர அம்பலத்தான் எனக் காட்சி தந்து அருள் பாலிக்கிறார் ஈசன்.

பஞ்சபூத தலங்களில்ஒன்றான தில்லையில் (பொன்னம்பலம்) ஆனந்தத் தாண்டவமாடி பிரபஞ்ச நடனத்தைக்( தைப்பூச திருநாளில்) காட்டியதாக புராணங்கள் கூறுகின்றன.

 

இரஜதசபை( வெள்ளியம்பலம்) எனப் பெயர் கொண்ட மதுரை மீனாட்சியம்மன் கோயில் சந்நிதியில்( வழக்கமாக இடக்காலைத் தூக்கி ஆடும் )நடராஜர் வலக்காலைத் தூக்கி ஆடும் நிலையில் அருட்காட்சி தருகிறார். இங்கு ஐயன் ஆடும் ஆட்டம் சந்தியா தாண்டவம்.


இரத்தின அம்பலம் எனப்படும் ரத்ன சபை என்ற பெயர் கொண்டது திருவாலங்காட்டில் அமைந்துள்ள வடாரண்யேஸ்வரர் கோயில். இங்குள்ள நடனக் கோலம் ஊர்த்தவ தாண்டவம் ஆகும்.

 காளி தேவிக்கும் நடராஜருக்கும் இடையே நடந்த நடனப் போட்டியில் சிறந்தவர் யார் எனக் கூற முடியா நிலையில், நடராசர் கீழே விழுந்த தனது காதணியை நடனம் இடையூறு அடையா வண்ணம் தனது காலிலேயே எடுத்து அணிய முற்பட,  அக்கோலத்தில் தன்னால் ஆட இயலாது எனக் காளி தன் தோல்வியை ஒப்புக் கொண்டதாகக் கூறுகிறது வரலாறு.

தாமிர அம்பலவாணனாய் எம்பெருமான் அருட்காட்சி தருவது திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோயில் ஆகும். இங்கு முனி தாண்டவம் ஆடி அன்பர்களுக்கு அருள் தருகிறார் எம்பெருமான். பெரிய சபாபதி என்ற மற்றொரு சந்நிதியும் இக்கோயிலில் நடராஜருக்கு உண்டு. இங்குள்ள உற்சவ மூர்த்தி கோயிலுக்கு வெளியே எடுத்துச் செல்லப்படுவது இல்லை.



சித்திர
அம்பலம் அல்லது சித்திர சபை எனப் பெயர் கொண்டது திருக்குற்றாலத்தில் அமைந்துள்ள குற்றாலநாதர் கோவில் ஆகும். இங்குள்ள சபையில் திரிபுர தாண்டவம் ஆடுகிறார் நடராஜப்பெருமான்.  விருட்சம் குறும்பலா என்பதால் ஐயன் குறுங்காலீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். சங்கு வடிவில் இக்கோயில் அமைந்துள்ளதால் சங்கு கோயில் எனவும் இது அழைக்கப்படுகிறது. இங்குள்ள சித்திர அம்பலம் முதன்மை கோயிலை விட்டு சற்று தள்ளி கண்கவர் சித்திர அம்பலமாய் அமைந்துள்ளது. இதன் உட்புறத்தில் நூற்றுக்கணக்கான அழகிய சுவர் ஓவியங்கள் இந்து சமய புராண கதாபாத்திரங்களையும் நிகழ்வுகளையும் சித்தரிக்கின்றன.

ஐந்து நடன சபைகளிலும் நடராஜன் ஆடும் திருநடனத்தைக் காண கண் கோடி வேண்டும்.  ஆடல்வல்லானின் ஆட்டமே பிரபஞ்சத்தின் பேரியக்கம்.

இவ்வாறு தன் ஆட்டத்தால் பிரபஞ்ச உயிர்களை உய்விக்கும் எம்பெருமான் மதுரையம்பதியில் மட்டும் வலது காலை தூக்கி இடது காலை வைத்து களிநடனம் புரிகிறார். ஏன்?

ஐயனின் 64 திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று. சங்கம் வளர்த்த மதுரையைப் பிற்காலத்தில் ஆண்டு வந்தான் ராஜசேகர பாண்டியன் என்னும் மன்னன்.

சிவபெருமான் மீது அளவில்லா அன்பு கொண்டவன். ஆயக்கலைகள் அறுபத்து மூன்றினைக் கற்றுத் தேர்ந்தவன். பரதக் கலையை மட்டும் கற்காமல் இருந்தான். அண்டத்தையே ஆட்டுவிக்கும் நடனத்துக்கு தலைவனான நடராஜர் ஆடும் நடனத்தை மானுடனான தான் ஆடுவது பெரும் குற்றம்  எனக்  கருதி அக்கலையைக் கற்காமல் இருந்தான். ஆனால் உலக உயிர்களை ஆட்டுவிக்கும் எம்பெருமானின் எண்ணம் வேறல்லவோ!

சோழ நாட்டிலிருந்து வந்த புலவரின் வடிவில் திருவிளையாடலை நடத்தினார் எம்பெருமான்.சோழ மன்னன் கரிகாலனது அவையில் இருந்து தான் வருவதாகவும் தம் மன்னன் 64 கலைகளிலும் சிறந்தவன் என்றும் பாண்டியன் ராஜ சேகரனுக்கு நடனக் கலையில் தேர்ச்சி இல்லை என்பதையும் சுட்டிக் காட்டினார் புலவர்.  அதற்குரிய விளக்கத்தை மன்னன் கூறிய போதும் அதை அவர் ஏற்றுக் கொண்டார் இல்லை. தன் சோழநாட்டின் சிறப்பையும் கரிகால் பெருவளத்தானின் சிறப்புகளையும் கூறிக்கொண்டிருந்தார்.

அவரது செயலால் வருத்தமடைந்த மன்னன் நடராஜப் பெருமானிடம் சென்று தன் நிலையைக் கூறி தான் நடனம் கற்றுக் கொள்ள அனுமதி கேட்டான். அசிரீரியும் அனுமதி அளித்தது.

பாண்டிய நாட்டின் மானத்தைக் காக்க நடனக்கலையைத் தீவிரமாக கற்றுக்கொண்டான் ராஜசேகர பாண்டியன்.  சில தினங்களிலேயே உடல் சோர்வடைந்து காலில் வலி பெருகுவதை உணர்ந்தான் அவன். மனதில் அவனுக்கு வினா ஒன்று உதித்தது.

சில நாட்களே நடனம் பயின்று வரும் தனக்கு இப்படி உடல் சோர்வு ஏற்பட்டு காலில் வலி மிகுதி உண்டாகிறதே ! யுகம் யுகமாய் எல்லாச் சபைகளிலும் நடனமாடும் நடராஜப் பெருமானது காலில் எவ்வளவு வலி உண்டாகும்?

இச்சிந்தனை தோன்றிய கணமே ஐயன் மீது அளவில்லாத பக்தி கொண்ட அடியவரான மன்னன் இறைவனிடம் வேண்டுகோள் ஒன்றைக் கட்டளையாக விடுக்கிறான்.

‘நின்ற தாள் எடுத்து வீசி எடுத்ததாள் நிலமீது ஊன்ற

இன்று நான் காண மாறி ஆடி என் வருத்தம் எல்லாம்

பொன்று மாசு எய்தி அன்றேல் பொன்றுவல் என்னா அன்பின்

குன்று அனான் சுரிகை வாள் மேல் குப்புற வீழ்வேன் என்னா.’

 (திருவிளையாடல் புராணம் – கால் மாறி ஆடிய படலம்-பரஞ்சோதி முனிவர்)

 “அய்யனே! நடனக் கலையின் அரசனே! பிரபஞ்ச இயக்கத்தின் காரணனே!  உன் உடல் சோர்வு நீங்க, நின்ற காலை வீசி (வலது கால்) வீசிய காலை நிலத்தில் வைத்து( இடது கால்) அருள் புரிவீராக!  இது என் மீது ஆணை!  இதற்கு நீர் சம்மதிக்கவில்லை எனில் என் உடைவாள் மீது குப்புற வீழ்ந்து என்னை அழித்துக் கொள்வேன்” எனக் கண்ணீர் மல்க வேண்டுகிறார். வாளை நட்டு வைத்து அதில் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொள்ளவும் திட்டமிட்டான். ஆனால்  என்ன ஆச்சரியம்!

கருணைக்கடலான வெள்ளியம்பலத்தான், மன்னனின் பக்தியில் மகிழ்ந்து,  கால் மாறி ஆடி, பாண்டியனின் மும்மலங்களையும் நீக்கி (ஆணவம், கன்மம், மாயை) அவனைப் பேரின்பக் கடலில் ஆழ்த்தினார். பரவச நிலையை அடைந்த பாண்டியன் இறைவனைப் போற்றி துதித்து,’ தந்தையே!  எக்காலத்தும் இம்மதுரையம்பதியில் இவ்வாறே நின்று தேவரீர் அருள் செய்ய வேண்டும். இதுவே அடியேன் வேண்டும் வரம் ஆகும்’ என்று மனமுருக பிரார்த்தனை செய்கிறான்.

அன்றுமுதல் கூத்தபிரான் வெள்ளியம்பலத்தில் கால்மாறி ஆடிய கோலத்திலேயே அருள்புரிகிறார். அருட்பெருஞ்ஜோதியாய், தனிப்பெருங்கருணயுடன் அடியாரின் துயர் துடைப்பவன் அல்லவா அவன்.

                     அவனன்றி ஓர் அணுவும் அசையாது.

                                    ஓம் நமசிவாய…!

 

Comments

Post a Comment

Popular posts from this blog

தாய்மையைப் போற்றுதும்...! தாய்மையைப் போற்றுதும்...!

உதடுகளாலும் நினைவுகளாலும் என்றுமே என்னை ஆசிர்வதிக்கும் அம்மாவுக்கு இறைவன், தான் எல்லோரிடமும் அன்பு செய்யும் பொருட்டு தாயைப் படைத்தான்...!  படைக்கும் பிரமனுக்குச் சமமாகத் தாய் என்பவள் போற்றப்படக் காரணம், பெருவரமான  `தாய்மை`. தாயை மதித்துப் போற்றும் பண்பாலேயே பிறந்த நாட்டைத்  தாய்நாடு எனவும்,உதடுகள் இணைந்து ஒலிக்கும் முதல் மொழியைத் தாய்மொழி எனவும் கூறி பெருமிதம் கொள்கிறோம். சங்ககாலம் முதற் தொட்டு இக்காலம் வரை தாய்மையைப் பாடாத கவி  ஞ ர்களைத் தேடிக் கண்டெடுக்க வேண்டும்...! தாய்மையைப்  பேசவும் எழுதவும் எல்லை என்பதேது? எச்சூழ்நிலையிலும் வெறுக்காது நம்மை ஏற்றுக் கொள்ளும் தன்னலமில்லா அன்புகொண்டவள் அன்னை. ஐ ந்தறிவு கொண்ட உயிரினங்களும் பகுத்தறிவு பெறும்_  ``தாய்மை` என்ற பேறு கொள்ளும்போது...! தாயை இறைவனாகக்  காண்பது பொதுநிலை .அந்த இறைவனையே தாயாய் நினைத்து உள்ளம் உருகுதல் பெருநிலை .கருணையின் வடிவமான இறைவனையே,தாய்மை நிலைக்கு  அழைத்துச்  சென்று அவனையே தாய்மையை உணரச்  செய்வது, அனைத்துக்கும் அப்பாற்பட்ட வேறுநிலை . ...

வாய்க்காலும் பனைமரமும் உணர்த்தும் நட்பு...!

இரு உயிர்களுக்கு இடையே காணப்படும் ஒன்றுபட்ட, ஒத்த உணர்வும் எண்ணங்களும் ' நட்பு ' என்னும் சொல்லுக்குப் பாலமாய் அமைகின்றன. சங்ககால இலக்கிய மாந்தர்களான கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார் அதியமான் - ஒளவையார் பாரி - கபிலர் ஆகியோர் அரசர்களுக்கும் புலவர்களுக்கும் இடையேயான மாசற்ற, இழிவற்ற, சுயநலமற்ற  நட்பினைப்  பறை சாற்றுவோராவர். ' ஒருவர்  பொறை இருவர் நட்பு ' எனக் கூறும் நாலடியார் நட்பின் அடிப்படைத் தன்மையாகப் ' பொறுத்தல் ' என்ற பண்பைக் குறிக்கிறது. நட்பு, நட்பாராய்தல், கூடாநட்பு, தீ நட்பு முதலியன பற்றி அறநூல்கள் பலவும் பலவிதமாக விளக்கினாலும், 'நாலடியார் 'கூறும் இவ்விரு பாடல்களும், இன்றைய வாழ்வியலோடு மிகவும் பொருத்தமானதாகவும், உளவியல் தன்மை கொண்டதாகவும் விளங்குகிறது. நாய்க்கால் சிறுவிரல் போல் நன் கணியாராயினும் ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்? சேய்த்தானும் சென்று கொளல் வேண்டும், செய்வினைக்கும் வாய்க்கால் அனையார் தொடர்பு.  (நாலடியார் 218) நாயின் காலில் இருக்கும் சிறிய விரல்களைப் போல, மிகுந்த நெருக்கம் உடையவராய்ப் பழகும் பலர், ஈயின் காலளவு கூட உதவி செய்யா ...

கல்விக்கு வழிகாட்டும் வள்ளுவம்...!

வெள்ளத்தால் போகாது வெந்தணலால் வேகாது வேந்தராலும் கொள்ளத்தான் முடியாது  கொடுத்தாலும் நிறைவொழியக் குறைபடாது கள்ளர்கோ மிக அரிது காவலோ மிக எளிது கல்வி என்னும் உள்ளத்தே பொருளிருக்க உலகெலாம் பொருள் தேடி உழல்வதேனோ...!  - விவேக சிந்தாமணி திருக்குறள் என்பது அறநூல்களின் அறிவுச்சுரங்கம். அந்த அறிவுச்சுரங்கத்தில் காணக்கிடக்கும் அதிகாரங்கள் பற்பல. கல்வி,கல்லாமை,கேள்வி,அறிவுடைமை போன்ற அதிகாரங்கள் அனைத்துமே கல்வியின் தொடர்புடையதாய் இருப்பினும் 'கல்வி' என்ற அதிகாரத்தில் கூறப்பட்ட வள்ளுவத்தின் வழிகாட்டலைக் கூறுவதே இக்கட்டுரையின் நோக்கம். இரண்டடி குறள் வெண்பாவால் ஆன திருக்குறளில், அந்தந்த காலத்திற்கேற்ற செய்திகள் வழிகாட்டுதல்கள் ஆகியவை நிரம்பி வழிகின்றன. 'கண்டதைப் படிக்கப் பண்டிதன் ஆவான்' என்ற சொல்வழக்கு ஒன்று உண்டு. 'கண்டு அதைப் படிக்கப் படிக்கப் பண்டிதன் ஆவான்' என்பதே சரி. கண்ட நூல்களை எல்லாம் கற்பதால் பயனில்லை. பாகுபாடு அறிந்து கற்கத் தகுந்த நூல்களைக் கற்பதால் மட்டுமே அறிவு வளர்ச்சி பெறும். இல்லையானால் காலமும் முயற்சியும் வீணாகும். அப்படித் தேர்ந்தெடுத்துப் படிக்கும் நூல்களை...